இடைவிடாது பெய்த கனமழையால் சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு – 6 பேர் பலி

சிக்கிமில் இடைவிடாது பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் 6 பேர் பலியாகினர்.

சிக்கிம் மாநிலத்தின் மாங்கன் மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டியது. இடைவிடாது கொட்டிய கன மழையால் அங்குள்ள மலைப்பாங்கான பகுதிகளில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவுகளால் சுற்றுலா தளங்களுக்கு பெயர் பெற்ற மாங்கன் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன.

குறிப்பாக அந்த மாவட்டத்தின் டிசோங்கு, சுங்தாங், லாச்சென் மற்றும் லாச்சுங் ஆகிய நகரங்கள் தற்போது நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. அங்கு 1,500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே கனமழையின் காரணமாக மாங்கன் மாவட்டத்தில் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்கு தண்ணீர் புகுந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் மின்கம்பங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

சங்கலாங் என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்ட பெய்லி பாலம் இடிந்து விழுந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட வெள்ளத்தில் இங்கிருந்த பாலம் அடித்து செல்லப்பட்ட நிலையில் புதிதாக பாலம் கட்டப்பட்டது. தற்போது அந்த பாலமும் இடிந்து விட்டது.

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மாங்கன் மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. இதனிடையே அங்கு நிலச்சரிவுகளில் சிக்கி 6 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.