ஆந்திர துணை முதலமைச்சராக பவன் கல்யாண் நியமனம்

சந்திரபாபு நாயுடு தலைமையிலான மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள மந்திரிகளுக்கு இலாகா அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளில் இந்த கூட்டணி 164 தொகுதிகளை கைப்பற்றியது.

இதையடுத்து, ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். இதனை தொடர்ந்து ஆந்திர மந்திரி சபையில் யார் யாருக்கு பொறுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. துணை முதலமைச்சராக யார் நியமிக்கப்படுவார்? என்பது குறித்தும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆந்திர துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேசுக்கு மனிதவளத்துறை, ஐ.டி. மற்றும் தகவல் தொடர்புத்துறை வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர மந்திரிசபையில் மொத்தம் 25 பேர் இடம்பெற்றுள்ளனர்.