பணியில் இருப்போருக்கான தொழில் படிப்புகள் : ஏஐசிடிஇ வழிமுறையில் திருத்தம்

பணியில் இருப்போருக்கான தொழில் படிப்புகள் வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறையில் ஏஐசிடிஇ திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; ஏஐசிடிஇ-யால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் சார்பில் பணியில் இருப்போருக்கு பிஇ, பிடெக், டிப்ளமா பிரிவில் தொழில்நுட்ப படிப்புகளை பயிற்றுவிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதற்கென சில வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

அதில் என்பிஏ அங்கீகாரம் பெற்ற படிப்புகளை மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் 3 படிப்புகளை மட்டுமே வழங்க வேண்டும். ஒரு படிப்பில் 30 பேருக்கு மட்டுமே இடங்கள் கொடுக்கப்பட வேண்டும். இதுதவிர குறைந்தபட்சம் 10 பேராவது ஒரு படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும்.

இந்த படிப்பில் சேருபவர்களும் கல்வி நிறுவனத்தில் இருந்து 50 கி.மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்பன பல்வேறு விதிமுறைகள் வரையறைக்கப்பட்டன. இதில் ஒரு விதிமுறையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இத்தகைய படிப்பில் சேரும் பணியில் இருப்போருக்கான எல்லை வரையறையானது சார்ந்த கல்வி நிறுவனத்தில் இருந்து 75 கி.மீட்டர் சுற்றளவாக மாற்றப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.