“பணவீக்கம் பிரச்சினையில் பிரதமர் மோடியிடம் தீர்வு இல்லை” – காங்கிரஸ் தாக்கு

மே மாத பணவீக்க தரவுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சி, நெருக்கடிக்கு பிரதமரிடம் தீர்வு இல்லை என்று சாடியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மோடி இருந்தால் விலை அதிகமாக இருக்கும். கடந்த நான்கு மாதங்களாக உணவுப் பொருள்களின் பணவீக்கம் 8.5 சதவீதமாக உள்ளது. பருப்பு வகைகள் 10 சதவீத பணவீக்கத்துடன் ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளன. மே மாத விலை 17.14 சதவீதம் அதிகரித்துள்ளது.

காங்கிரஸ் நியாய பத்ராவில் விலையேற்றத்துக்கு, குறிப்பாக பருப்பு விலை ஏற்றத்துக்கு இரண்டு தீர்வுகளை முன்வைத்திருந்தோம். எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி பருப்பு வகைகளுக்கு சட்டபூர்வமாக குறைந்தபட்ச ஆதரவு விலை தருவது. இது நமது விவசாயிகளின் பருப்பு சாகுபாடியை ஊக்குவிக்கும், விலையையும், சந்தையையும் உறுதி செய்யும்.

பிடிஎஸ்-ல் பருப்பு வகைகளை சேர்ப்பது, இது ஏழைகள் புரதம் எடுத்துக் கொள்வதை அதிகரிக்கும் மற்றும் பணவீக்கத்தை தடுக்கும். ஆனால், நமது மூன்றில் ஒரு பங்கு பிரதம மந்திரியிடம் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மே மாதம் சில்லரை பணவீக்கம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து ஓராண்டில் மிகவும் குறைவாக 4.75 சதவீதத்தை அடைந்துள்ளது என்று நேற்று வெளியான அரசு தரவுகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சியின் இந்த விமர்சனம் வெளியாகியுள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (என்எஸ்ஓ) தரவுகளின் படி, உணவுப்பொருள்களின் பணவீக்கம் மே மாதம் 8.69 சதவீதமாக உள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 8.70 சதவீதமாக இருந்தது. மேலும், நகர்புறத்தின் சில்லறை பணவீக்கமான 4.15 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் ஊரகப் பகுதிகளில் சில்லறை பணவீக்கம் 5.28 சதவீதம் அதிகரித்துள்ளது என்று என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் காய்கறிகளுக்கான பணவீக்கம் அதிகரித்திருந்தது. பழங்களைப் பொருத்த வரை பணவீக்கம் குறைந்திருந்தது. இதனிடையே, நுகர்வோர் குறியீட்டு எண் இருபுறமும் 2 சதவீதம் என்ற அளவில் இருக்கும் வகையில் 4 சதவீதமாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கியை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.