விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவை மாபெரும் வெற்றி பெறச் செய்வோம் – முத்தரசன்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை மாபெரும் வெற்றி பெறச் செய்வோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து இந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 10.07.2024 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தி.மு. கழகத்தின் வேட்பாளராக அன்னியூர் சிவாவை தி.மு. கழகத் தலைவர் நேற்று அறிவித்துள்ளார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தி.மு.கழக வேட்பாளருக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக மற்றும் தோழமை கட்சிகளோடு இணைந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திமுக வேட்பாளரின் மாபெரும் வெற்றியை உறுதி செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.