விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் விடுவிப்பு : திமுக அறிவிப்பு

திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை அப்பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளது அக்கட்சித் தலைமை.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பில், “திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி கே.எஸ்.மஸ்தான் விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக டாக்டர் ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இதேபோல், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த நா.புகழேந்தி உயிரிழந்த காரணத்தால் கட்சிப் பணிகள் நடந்திட கெளதம்சிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.