பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் : ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். உலக பாரா தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.75 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.