நாமக்கல்லில் கார்கள் நேருக்கு நேர் மோதல் : கார் ஓட்டிப் பழகிய 2 சிறுவர்கள் உயிரிழப்பு

பரமத்தி வேலூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சிறுவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டி பழகியபோது நேரிட்ட இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த கபிலர்மலை பெரியமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் (14). இவர் நேற்று இரவு 11 மணி அளவில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் லோகேஷ் (17) என்பவருடன் ஆம்னி கார் ஓட்டி பழகி உள்ளார். காரை பரமத்தி வேலூர் பைபாஸ் சாலையில் இருந்து கபிலர்மலை நோக்கி சுதர்சன் ஓட்டி பழகிக் கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே ஈரோடு நோக்கிச் சென்ற மற்றொரு கார் மீது நேருக்கு நேர் அதிவேகமாக மோதி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் சுதர்சன் மற்றும் அவரது நண்பர் லோகேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த ஜேடர்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீஸார் நடத்தி விசாரணையில் சிறுவர்கள் இருவரும் அதிவேகமாக கார் ஓட்டியது விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஜேடர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.