விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, திமுகவின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையின் முடிவில் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என்றும், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தாக்கல் ஜூன் 14-ம் தேதியும், வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21-ம் தேதி எனவும் அறிவித்தது.

மேலும், மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ம் தேதி நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 -ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு ஜூலை 10 -ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது.