“இக்கல்வியாண்டு இனிதே அமையட்டும்” – பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 10 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. ஒருசில குழந்தைகள் அழுது கொண்டும், ஒரு சிலர் புன்னகையுடனும் பள்ளிக்கு செல்வதை காண முடிகிறது.

இந்நிலையில், இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்.

பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை – உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.