ஓட்டுநர் உரிமம் பெற இனி மருத்துவ சான்றிதழ் கட்டாயம் : வெளியானது புது உத்தரவு

தமிழ்நாட்டில் 40 வயதுக்கு மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமம் பெறவோ, புதுப்பிக்கவோ இனி மருத்துவச் சான்றிதழ் அவசியம் என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மத்திய மோட்டார் வாகன விதி எண் 5-ன்படி, 40 வயதிற்கு மேற்பட்டோர் மருத்துவச்சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறவோ, புதுப்பிக்கவோ முடியும். மேலும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்களிடம் சான்றுபெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் தகுதி வாய்ந்த மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெறாமல் போலி மருத்துவர்களிடம் சான்றிதழ்கள் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்துள்ள நிகழ்வுகள் நடைபெற்று வந்துள்ளன.

இது குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், போக்குவரத்து துறையின் சாரதி மென்பொருளில் போலி மருத்துவச் சான்றுகள் பதிவேற்றம் செய்யப்படுவதைத் தடுக்கவே புதிய அறிவிப்பு என்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் வழங்கிய பதிவு எண்ணை மருத்துவர்கள் சாரதி மென்பொருளில் பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.