கோவையில் தாயைப் பிரிந்த குட்டி யானை முதுமலை முகாமுக்கு அனுப்பிவைப்பு

கோவையில் தாயைப் பிரிந்த குட்டி யானை முதுமலை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த மே 30-ம் தேதி உடல் நலம் பாதித்த நிலையில் தரையில் படுத்து கிடந்த 40 வயது பெண் யானைக்கு, 5 நாட்களாக வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். அந்த பெண் யானையுடன் இருந்த 3 மாத ஆண் குட்டி யானை, ஜூன் 1-ம் தேதி மற்றொரு யானைக் கூட்டத்துடன் இணைந்து, வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர், உடல் நலம் தேறிய தாய் யானை, கடந்த 3-ம் தேதி வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 4-ம் தேதி கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்காக, ஆனைமலை டாப்சிலிப் கோழிகமுதி யானைகள் முகாமில் இருந்து அனுபவம் வாய்ந்த பாகன்கள், காவடி உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டு, குட்டி யானையை சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும், தாய் யானை, குட்டியை ஏற்காத நிலையில், மற்றொரு யானை கூட்டத்துடன் குட்டியை சேர்க்க வனத்துறையினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மருதமலை வனப்பகுதியில் மற்றொரு யானை கூட்டத்துடன் குட்டியைச் சேர்க்க வனத்துறையினர் சனிக்கிழமை காலை முதல் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “குட்டி யானையை முகாமுக்கு கொண்டு செல்வது குறித்து தலைமை வன உயிரின காப்பாளர் முடிவு அறிவிப்பார்” என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் யானை கூட்டத்துடன் குட்டி யானையை சேர்க்க முயற்சி சனிக்கிழமை இரவு வரை நீடித்தது. வனத்துறையின் ஒரு வாரம் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து குட்டியானையை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் வைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது‌. இதையடுத்து குட்டி யானை ஞாயிற்றுக்கிழமை முதுமலை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது என மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.