பூதாகரமாகும் நீட் முறைகேடு விவகாரம் : வட மாநிலங்களில் வெடித்தது போராட்டம்

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மாதம் 5 ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வு மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. பீகாரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இந்த புகார்களை அத்தேர்வை நடத்திய தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) மறுத்தது.

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் பாராளுமன்றத் தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவர்கள் முதலிடம் பெற்றதோடு, அரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் முதலிடம் பெற்றது பெரும் சர்ச்சையானது.

நீட் தேர்வில் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கம் முதல் நீட் தேர்வை தமிழகம் எதிர்த்து வந்த நிலையில் தற்போது வட மாநிலங்களிலும் நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையில் நீட் தீர்வு வெளியாவதற்கு பிறகு ராஜஸ்தான் மாநிலம் நீட் பயிற்சி மையங்கள் மொய்த்துக்கிடக்கும் கோட்டா நகரில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தற்போது வெளியாகியுள்ள நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்து மறு தேர்வு நடத்துமாறு நீட் மாணவர்களும் பொதுமக்களும் வட மாநிலங்களில் போராட்டம் நடந்தத் தொடங்கியுள்ளனர். வாரணாசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் முன் ஏராளமான மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். ராஸஜ்தான் கோட்டா நகரிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மேலும் இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வலியுறுத்தியுள்ளது. நீட் தேர்வு மகாராஷ்டிரா மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகவும் அம்மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.