“எம்ஜிஆர், ஜெ. ஆதரவாளர்கள் இனி மோடியை பின்பற்றுவர்” – தமிழக பாஜக நிர்வாகி ஏ.என்.எஸ்.பிரசாத்

எம்ஜிஆர், ஜெயலலிதாவை பின்பற்றுபவர்கள் இனிமேல் மோடியை பின்பற்றி பாஜக பக்கம் வருவார்கள் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக 11.24 சதவீதம், அதாவது 48 லட்சத்து 80 ஆயிரத்து 954 வாக்குகளைப் பெற்று, திமுக, அதிமுகவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இது பலரின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது.

2019, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் அதிமுகவின் தோல்விக்கு, பாஜகவுடன் கூட்டணி வைத்ததே காரணம் என்று அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார்கள். ஆனால், உண்மையான காரணம் அதுவல்ல என்பதை இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்ட அதிமுக வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்திருக்கிறது. 7 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்திருக்கிறது.

2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல்களில் ஒரு சில தொகுதிகளைத் தவிர, பாஜகவுக்கு ஆதரவாக அதிமுகவினர் வேலை செய்யவில்லை. பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற திமுகவின் திட்டத்துக்கு அதிமுகவினர் உடந்தையாக இருந்தனர். இதனால், தான் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம். அது பாஜகவின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது என்று தனி கூட்டணி அமைத்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதற்கு இன்று பெரும் பலன் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் பாஜக பெற்றிருக்கும் 11.24 சதவீத வாக்குகள் என்பது மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு வித்திடப் போகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்களின் வழி வந்தவர்கள், அவர்களை பின்பற்றுபவர்கள் இனி மோடியை பின்பற்றி பாஜக பக்கம் திரும்புவார்கள்.

திமுகவின் தேசிய அணியாக காங்கிரஸ் மாறிவிட்டது. இப்போது அதிமுக திமுகவின் கிளைக் கழகம் போல மாறிக்கொண்டிருக்கிறது. திமுகவை வீழ்த்த வேண்டுமானால் அது பாஜகவால்தான் முடியும் என்கிற நிலையை நோக்கி தமிழக அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மக்களவைத் தேர்தல் உணர்த்தும் உண்மை இதுதான்” என்று தெரிவித்துள்ளார்.