சத்தீஷ்காரில் நடந்த என்கவுண்ட்டரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை – பாதுகாப்புப்படையினர் அதிரடி

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கரமாக துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில், 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும் 3 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நக்சலைட்டுகளிடமிருந்து ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். துப்பாக்கி சண்டை நடந்த இடத்தில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு என்கவுண்டரில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.