தமிழகத்துக்கு 8 முறை மோடி வந்தும் பாஜகவால் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

தமிழகத்துக்கு பிரதமர் மோடி, 8 முறை பிரச்சாரத்துக்கு வந்தபோதிலும், பாஜகவால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் திமுக கூட்டணி, அனைத்துத் தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்ற நிலையில், வாக்கு சதவீதத்தை வைத்துக் கொண்டு, எதிர்க்கட்சிகளான அதிமுகவும், பாஜகவும் கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுகவை தமிழக மக்கள் புறக்கணித்து விட்டதாகவும் இனி அக்கட்சியுடன் மீண்டும் கூட்டணி வைக்க வாய்ப்புகள் இல்லை என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், “தேர்தல் என்பது மக்கள் அளிக்கும் தீர்ப்பு. அதற்கு எல்லோரும் தலை வணங்க வேண்டும். தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். அதிமுக தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி. 2026ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான். அண்ணாமலை புள்ளி ராஜாவாக ஆகிவிட்டார்.

புள்ளி விவரங்கள் எடுக்கும் ஒரு ஐபிஎஸ் அலுவலராக அவர் செயல்பட்டாரே தவிர, ஒரு கட்சியின் தலைவராக அவருடைய பேச்சு இல்லை. 2014ல் இதேபோல் தான் பாஜக அணியில் பாமக உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. அந்தத் தேர்தலில் வாங்கிய வாக்குகளை விட, தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வாங்கிய ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது.

இதை ஏன் அண்ணாமலை சொல்ல மறந்தார்? 10 ஆண்டுகளில் பாஜக வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. பிரதமரை தேர்தல் பிரச்சாரத்துக்கு 8 முறை அழைத்து வந்தனர். ஆனால் ஒரு தொகுதியில் கூட பாஜ வெற்றி பெறவில்லையே? அவர்கள் வலுவாக இருக்கக் கூடிய கன்னியாகுமரியில் கூட பாஜகவால் வெற்றி பெற இயலவில்லை” என்றார்.