வெற்றியின் முகட்டில் நிற்கிறது இந்தியா கூட்டணி : இறுதிகட்ட தேர்தல் நாளில் முதல்வர் ஸ்டாலின் பதிவு

நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) நடைபெற்று வரும் சூழலில், ‘வெற்றியின் முகட்டில் நிற்கிறது இந்தியா கூட்டணி’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவருடைய எக்ஸ் பதிவில், “பாஜக.,வின் பத்தண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது.

தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பாஜக.,வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.

தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பாஜக உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன.

வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக சார்பில் கழகப் பொருளாளரும் – நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். பாசிச பாஜக வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.