காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்து விட்டது : அமித் ஷா குற்றச்சாட்டு

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு விவாதங்களில் கட்சி பங்கேற்காது என்று தோல்வி பயத்தில் தான் காங்கிரஸ் அறிவித்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலில் இதுவரை ஆறுகட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இந்த நிலையில், 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடந்து வருகிறது.

பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று 28 கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியும் மல்லுக்கட்டி வருகிறது. இந்த தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி வருகிறார். இந்த நிலையில் தேர்தல் முடிவு ஜூன் 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் அன்று மாலையே மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படும்.

இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான ஊடக விவாதங்களில் தங்களது கட்சி பங்கேற்காது என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆனால், ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு ஊடக விவாதங்களில் பங்கேற்கும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பே தோல்வி பயத்தில் தான் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,” காங்கிரஸ் உள்விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட்டதால், அக்கட்சி எதிர்மறையான கட்சியாக மாறியுள்ளது. தற்போது உண்மையை ஏற்காத கட்சியாக மாறிவிட்டது. மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெறுவோம் என்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது.

ஆனால். இப்போது உண்மையை அந்த கட்சியினர் உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான், கருத்துக்கணிப்பு முடிவுகளுக்குப் பிறகு ஊடகங்களின் கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியாது. அதனால் தான் விவாதங்களில் இருந்து காங்கிரஸ் விலகியிருக்கிறது” என்றார்.