அவிநாசியில் பேருந்தில் வந்த பெண் பயணியின் 38 பவுன் தங்க நகைகள் மாயம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேருந்தில் வந்த பெண்ணின் கைப்பையில் வைத்திருந்த 38 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது. இது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் சின்னப்பன் மனைவி எஸ்லிமேரி (50). இவர், இன்று நீலகிரி மாவட்டம் உதகை செல்வதற்காக அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.

அப்போது அவர் தனது கைப்பையில் 38 பவுன் நகைகளை ஒரு டிபன் பாக்ஸில் போட்டுக்கொண்டு வந்துள்ளார். அவிநாசி பேருந்து பழைய பேருந்து நிலையம் வந்தபோது எஸ்லிமேரி தனது கைப்பையை பார்த்திருக்கிறார். அப்போது, அவரது கைப்பையில் நகையுடன் இருந்த டிபன் பாக்ஸைக் காணவில்லை.

இதனால் பதறித் துடித்த எஸ்லிமேரி, நகை திருடுபோய்விட்டதாக பேருந்துக்குள்ளேயே சத்தம் போட்டிருக்கிறார். இதனையடுத்து பேருந்து நடத்துநர், ஓட்டுநர் உள்ளிட்டோர் பேருந்தை அருகில் இருந்த அவிநாசி காவல் நிலையம் முன் நிறுத்தி சோதனையிட்டனர். இந்த சோதனையில் ஏதுவும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும் எஸ்லிமேரி கொடுத்த புகாரின் பேரில், அவிநாசி போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.