மேற்கு வங்காளத்தில் வன்முறை : தண்ணீரில் வீசப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்

தண்ணீரில் வீசப்பட்ட எந்திரங்கள் பழுது ஏற்பட்டால் மாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த கூடுதல் எந்திரங்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் 7வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைய உள்ளது.

இந்த தேர்தலை முன்னிட்டு பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு ஈடுபட்டுள்ளனர். இதில் மேற்கு வங்காளத்தில் உள்ள 9 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்காக வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் பல இடங்களில் வாக்குப்பதிவு தொடங்கியதுமே வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், குல்தாய் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 40, 41-ல், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதுமே வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் அங்கிருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் (வாக்காளர் வாக்குப்பதிவு சரிபார்ப்பு) எந்திரங்கள் ஆகியவை தண்ணீரில் வீசப்பட்டன. ஆனால், இந்த எந்திரங்கள் பழுது ஏற்பட்டால் மாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த கூடுதல் எந்திரங்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பங்கரில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சி தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. அங்கு கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.