சென்னையில் தொடரும் நாய்க்கடி சம்பவங்கள் : பெருகும் நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகரப் பகுதியில் தெருநாய்கள் தொல்லை பெரும் சவாலாக இருந்து வருகின்றன. தினந்தோரும் தெருநாய்கள் கடித்ததாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. நேற்றும் அம்பத்தூர் பகுதியில் சிறுமி ஒருவரை தெரு நாய்கள் கடித்துக் குதறியுள்ளன.

மாநகராட்சி நிர்வாகமும் மண்டலத்துக்கு ஒரு வாகனம் வீதம் 15 வாகனங்கள் மூலம் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து, அதே இடத்தில் விட்டு வருகிறது. ஆனால், தெருநாய் தொல்லையால் அவதிப்பட்டு வருபவர்கள் எங்கள் பிரச்சினைக்கு இது தீர்வு இல்லை எனக் குற்றம்சாட்டி வருகின்றனர்.

வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களாலும் பொதுமக்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்போர், அவற்றுக்கு சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெறுவது கட்டாயம். இதன் மூலம் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடுவது உறுதி செய்யப்படுகிறது. குடற்புழு நீக்கமும் செய்யப்பட்டு, அவற்றின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகிறது. மாநகராட்சியிடம் உரிமம் பெறாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையில் சென்னை மாநகரப் பகுதியில் ஆயிரக்கணக்கில் இயங்கி வரும் கையேந்தி பவன் உணவகங்களில் இருந்து உருவாகும் உணவுக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல், சாலையோரங்களில் கொட்டுவதும், அதை நாய்கள் உண்பதன் காரணமாகவும் தெருநாய்கள் பெருக்கம் அதிமாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஒவ்வொரு கடையும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரு வகையான குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும். அதில் சேகரமாகும் குப்பைகளை முறையாக மாநகாரட்சி பணியாளரிடம் வழங்கி அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு வைக்காத கடைகளுக்கு அபராதம் விதித்து, சாலையோர உணவக, உணவுக் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அனைத்து சாலையோர உணவகம் நடத்துவோருக்கும் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்” என்றனர்.