மின்சாரம் பாய்ந்து கண் பார்வையிழந்த குரங்கு : ஹரியாணா மருத்துவர்கள் செய்த சாதனை

ஹரியாணாவில் மின்சாரம் தாக்கி தீக்காயம் அடைந்த குரங்கிற்கு கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடும் வெயில் தாக்கம் காரணமாக மரத்திலிருந்து சுருண்டு விழுந்த குரங்கிற்கு ஆபத்து கால முதலுதவியான சிபிஆர் சிகிச்சை அளித்ததன் மூலம் அந்த ஜீவனின் உயிரை போலீஸ்காரர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வைரலானது.

இந்த நிலையில், மின்சாரம் தாக்கி கண் பார்வை இழந்த குரங்கிற்கு அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் பார்வை தந்து சாதனைப் படைத்துள்ளனர். ஹரியாணாவில் உள்ள ஹிசாரின் லாலா லஜ்பத் ராய் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் (LUVAS) கூற்றுப்படி, மாநிலத்தில் குரங்கிற்கு செய்யப்பட்ட முதல் கண்புரை அறுவை சிகிச்சை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியாணாவில் மின்சாரம் பாய்ந்து குரங்கு ஒன்று கீழே விழுந்துள்ளது. இதைப் பார்த்த ஹன்சி குடியிருப்பாளரான விலங்கு ஆர்வலர் முனிஷ் என்பவர் தீக்காயங்களுடன் லாலா லஜபதி ராய் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்திற்குக் குரங்கைக் கொண்டு சென்றுள்ளார்.

குரங்கு ஆரம்பத்தில் நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தது. ஆனால் பல நாட்கள் கவனிப்பு மற்றும் சிகிச்சைக்குப் பிறகு, குரங்கு நடக்கத் தொடங்கியுள்ளது. அப்போது தான் அந்த ​​​​குரங்கு பார்வைத் திறனை இழந்ததைக் கண்டறிந்ததாக விலங்கு அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்க துறையின் தலைவர் ஆர்.என். சௌத்ரி கூறினார்.

இதையடுத்து, சிகிச்சைக்காக குரங்கு, லுவாஸ் அறுவை சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பல்கலைக்கழகத்தின் விலங்கு கண் பிரிவில் பரிசோதனை செய்த மருத்துவர் பிரியங்கா துக்கல், குரங்கின் இரு கண்களிலும் வெள்ளைக் கண்புரை ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தார். இதன் பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின் அந்த குரங்கு பார்வை திறனை மீண்டும் பெற்றுள்ளது. ஹரியாணாவில் குரங்கிற்கு செய்யப்பட்ட முதல் கண்புரை அறுவை சிகிச்சை இது என்பது குறிப்பிடத்தக்கது.