எமர்ஜென்சி காலத்தில் அரசியல் சாசனத்தின் கழுத்தை காங்கிரஸ் நெரித்தது : பிரதமர் மோடி

எமர்ஜென்சி காலத்தில் அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்த கட்சி காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பஞ்சாபின் ஹோரியார்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “புதிய விருப்பங்கள், புதிய எதிர்பார்ப்புகள், புதிய நம்பிக்கை ஆகியவற்றுடன் இன்று நாடு இருக்கிறது. அறுதிப் பெரும்பான்மையுடன் மத்திய அரசு ஹாட்ரிக் அடிக்கப் போகிறது. பல பத்தாண்டுகளுக்குப் பிறகு இது நடக்கப் போகிறது. இதற்கு மிகப்பெரிய காரணம், ‘வளர்ந்த இந்தியா’ என்ற கனவுதான். இன்று ஒவ்வொரு இந்தியரும் ‘வளர்ந்த இந்தியா’ என்ற கனவோடு ஒன்றுபட்டுள்ளனர். எனவே, நாட்டின் ஒவ்வொரு மக்களும் நம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.

நமது நாட்டு மக்கள் தற்போது வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, ​​அங்கு இந்தியா மீதும், இந்தியர்கள் மீதும் மரியாதை அதிகரித்திருப்பதை அவர்களே பார்க்கிறார்கள். நாட்டில் பலமான அரசாங்கம் இருக்கும் போது வெளிநாட்டு அரசாங்கங்கள் நமது பலத்தை கவனிக்கின்றன. ஏழைகள் நலன் என்பது எனது அரசாங்கத்தின் ஒரு பெரிய முன்னுரிமை. கடந்த 10 ஆண்டுகளில், ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் மற்றும் இலவச சிகிச்சை வசதிகளை வழங்கியுள்ளோம். இன்று, எந்த ஏழை தாயின் குழந்தையும் பசியுடன் தூங்க வேண்டிய நிலை இல்லை. இன்று எந்த ஏழைப் பெண்ணும் தனது நோயை மறைக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

இந்த தேர்தல் காலத்திலும், நமது அரசாங்கம் ஒரு நொடியை கூட வீணாக்கவில்லை. ஆட்சி அமைந்தவுடன் அடுத்த 125 நாட்களில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமோ அதற்கான பாதை வரைபட வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்தும் திட்டமிடப்படுகிறது. அதோடு, அடுத்த 25 ஆண்டுகாலத்திற்கான தொலைநோக்குப் பார்வையோடு நமது அரசு வேகமாக முன்னேறி வருகிறது.

காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் சுயநல அரசியலாலும், வாக்கு வங்கி அரசியலாலும் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. வாக்கு வங்கி மீது கொண்ட மோகத்தால், நாடு பிரிந்த நேரத்தில் கர்தார்பூர் சாஹிப் நகரை இந்தியாவோடு சேர்க்க வேண்டும் என்று உரிமையை நிலைநாட்ட அவர்களால் முடியவில்லை. இவர்கள்தான் தங்கள் வாக்கு வங்கிக்காக ராமர் கோயில் கட்டுவதை தொடர்ந்து எதிர்த்தவர்கள். தாஜா செய்யும் அரசியல் காரணமாக இந்தியா கூட்டணி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறது.

இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் தற்போது, அரசியலமைப்பு குறித்து அதிகம் முழங்குகிறார்கள். எமர்ஜென்சி காலத்தில் அரசியல் சாசனத்தின் கழுத்தை நெரித்தவர்கள் இவர்கள். 1984-ல் ஏற்பட்ட கலவரத்தில், சீக்கியர்களின் கழுத்தில் டயர்களைக் கட்டி எரித்தபோது, இவர்கள் அரசியலமைப்பைப் பற்றி சிந்திக்கவில்லை.

ஊழலின் தாய் காங்கிரஸ். 60 ஆண்டுகளாக காங்கிரஸ் பல ஊழல்களை செய்துள்ளது. ஊழலில் காங்கிரஸ் பிஎச்டி செய்ததாக தெரிகிறது. இப்போது மற்றொரு ஊழல் கட்சி (ஆம் ஆத்மி கட்சி) காங்கிரஸுடன் இணைந்துள்ளது. பஞ்சாபில் இவ்விரு கட்சிகளும் நேருக்கு நேர் சண்டையிடுவதாக நாடகம் நடத்துகிறார்கள். டெல்லியில் ஒன்றாக தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

பஞ்சாபை போதைப்பொருளில் இருந்து விடுவிப்பதற்காக வந்தவர்கள் ஆம் ஆத்மி கட்சியினர். ஆனால் போதைப்பொருளை, பொருள் ஈட்டுவதற்கான வழிமுறையாக ஆக்கிக்கொண்டவர்கள் இவர்கள். டெல்லியில் நடந்த மதுபான ஊழல் குறித்து உலகம் முழுவதும் அறிந்திருக்கிறது. பஞ்சாபில் சுரங்க மாஃபியா தலைவிரித்தாடுகிறது. இந்த தீவிர ஊழல்வாதிகள், பயங்கரமான பொய்யர்கள் பஞ்சாபை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர். இவர்கள் பஞ்சாபில் தொழில் மற்றும் விவசாயம் இரண்டையும் நாசம் செய்துவிட்டனர். இந்த தீவிர ஊழல்வாதிகள், பயங்கரமான பொய்யர்கள், பெண் ஒடுக்குமுறையிலும் முதலிடம் வகிக்கின்றனர்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.