நொய்டாவில் ஏசி வெடித்து அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

நொய்டாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று குளிர்சாதன இயந்திரம் (ஏசி) வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

உத்தரப் பிரதேசம் – டெல்லி எல்லையில் உள்ள நொய்டாவின் செக்டார் 100ல் உள்ள ‘லோட்டஸ் புளூபேர்ட் சொசைட்டி’-யில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏர் கண்டிஷனிங் யூனிட் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பிளாட் முழுவதும் பரவி, அருகிலுள்ள குடியிருப்புகளிலும் பற்றியது.

மேலும், அந்த வளாகம் முழுவதும் கரும்புகை பரவியதால் அந்த அடிக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களிடையே பீதி ஏற்பட்டது. இதையடுத்து குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் கீழே இறங்கினர். இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.

அந்த வீடியோ காட்சியில் மிக உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கரும் புகை வெளியேறும் காட்சிகள் பதிவாகி உள்ளன. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் கடுமையான வெப்ப அலை வீசுவதால், பொதுமக்கள் அதிக அளவில் ஏசி, ஏர்கூலர் போன்ற குளிரூட்டும் சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏசி வெடித்து குடியிருப்பில் தீப்பிடித்த சம்பவம் நொய்டாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.