அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி புகைப்பட கண்காட்சி : டி.ஆர்.பாலு தொடங்கி வைத்தார்

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தொடர்பான புகைப்பட கண்காட்சியை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு இன்று தொடங்கி வைத்தார்.

திமுகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. வரும் ஜூன் 3-ம் தேதி நூற்றாண்டு நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி நூற்றாண்டு புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

புகைப்பட நிபுணர் கோவை சுப்பு ஏற்பாட்டில், அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் இன்று கருணாநிதியின் வரலாற்றுச் சிறப்பு புகைப்பட கண்காட்சியை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., தொடங்கி வைத்தார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு அணித் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சி எஸ்.முருகன், துறைமுகம் காஜா, துணை அமைப்புச் செயலாளர்கள் ஆஸ்டின், தாயகம் கவி உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.