ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் : நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 4 பேருக்கு சம்மன் – 31-ம் தேதி விசாரணை

தாம்பரத்தில், ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உட்பட நான்கு பேருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி, வரும் 31-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி, திருநெல்வேலி விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது. தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து இந்த ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது அதில் பயணித்த மூவரிடம் கணக்கில் காட்டப்படாத ரூ.4 கோடி பணம் இருந்தது தெரிய வந்தது. அந்தப் பணத்தை பறக்கும்படையினர் கைப்பற்றினர்.

இந்தத் தொகை, பாஜகவின் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்பட்ட தொகை என புகார்கள் எழுந்தன. இதற்கிடையே, இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இவர்கள் வழக்கு தொடர்பாக பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.

பணத்துடன் பிடிபட்ட சதீஷ், அவரது சகோதரர் நவீன், ஸ்ரீவைகுண்டம் டிரைவர் பெருமாள், மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி, எழும்பூர் சிபிசிஐடி அலுவலகம் வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இதேபோல் பணம் கை மாறியதாக கூறப்படும் தமிழ்நாடு பாஜக வர்த்தகப் பிரிவு தலைவர் கோவர்தனுக்கு சொந்தமான சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள உணவகம், நீலாங்கரை பகுதியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

கோவையில் வசிக்கும் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் அவரது வீட்டில் வைத்து கடந்த வாரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன், கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் வரும் 31-ம் தேதி சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர்.