போக்சோ குற்றவாளிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை : ஐகோர்ட் அனுமதி மறுப்பு

போக்சோ வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி வழங்க மறுத்த சென்னை ஐகோர்ட், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிட்டுள்ளது.

போக்சோ வழக்கில் தண்டிக்கப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்தவருக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்ய மூன்று மாத கால விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி, அவரது மகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது மனுதாரரின் தந்தை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், “சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை பெயர் பெற்ற மருத்துவமனை என்பதால், மனுதாரர் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை” என்று கூறி, ஸ்டான்லி மருத்துவமனையில் மனுதாரரின் தந்தைக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உத்தரவிட்டனர். மேலும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அந்த தந்தையை சந்திக்க அவரது மகனுக்கோ, அவரது தாயாருக்கோ எந்தவொரு கட்டுப்பாடுகளும் விதிக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.