2002ம் ஆண்டில் நடந்த கொலை வழக்கு : குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேர் விடுதலை

கடந்த 2002ல் தேரா சச்சா சவுதா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் அந்த அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், 4 பேரை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

ஹரியாணா மாநிலம், குருக்ஷேத்ராவின் கான்பூர் கோலியான் கிராமத்தில் வசித்து வந்த ‘தேரா சச்சா சவுதா’ அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங், கடந்த 2002ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி, தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விரிவான விசாரணை நடத்தி, கடந்த 2007ல் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் 2021 அக்டோபர் 8ம் தேதி அன்று, ரஞ்சித் சிங் கொலை வழக்கு தொடர்பாக ரஹீம் மற்றும் நான்கு பேர் குற்றவாளிகள் என பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குர்மீத் ராம் ரஹீம், 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு குர்மீத் ராம் ரஹீமுக்கு ரூ.31 லட்சமும், மற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து குர்மீத் ராம் ரஹீம் தரப்பில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ்வர் தாக்கூர், லலித் பத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

இந்த வழக்கு தவிர, தனது இரண்டு சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் குர்மீத் ராம் ரஹீம், தற்போது ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.