திருப்பத்தூரில் மழைக்கு ஒதுங்கியவர்கள் மீது கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் காயம்

திருப்பத்தூரில் மழைக்கு ஒதுங்கியவர்கள் மீது கட்டிடம் இடிந்து விழுந்து பெண் உட்பட 6 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதையடுத்து பொன்னமராவதி சாலையில் காவலர்கள் குடியிருப்பு அருகே பாதி கட்டிய நிலையில் உபயோகமற்ற கட்டிடத்தில் அவ்வழியாக சென்ற 15-க்கும் மேற்பட்டோர் மழைக்கு ஒதுங்கினர். அப்போது திடீரென அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.

இதில் சொக்கநாதபுரதத்தைச் சேர்ந்த மதுரை வீரன் (46), மேலூரைச் சேர்ந்த செல்வம் (36), சூரியன்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் (20), கீழக்கோட்டையைச் சேர்ந்த வசந்தகுமார் (30), முத்தம்மாள் (58), காளையார்கோவிலைச் சேர்ந்த அருண் (30) ஆகிய 6 பேர் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்த சுப்ரமணியன் தலைமையிலான வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்த 6 பேருக்கும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து திருப்பத்தூர் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.