சென்னையில் தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள தனியார் பள்ளிக்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டதில், மிரட்டல் புரளி என உறுதி செய்யப்பட்டது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபலமான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் இது குறித்து உடனடியாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பட்டினப்பாக்கம் போலீஸார் வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துக் கொண்டு பள்ளி முழுவதும் சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் கருவிகள் மூலமாகவும் மோப்ப நாய்கள் உதவியுடனும் சோதனை நடத்தப்பட்டது.

நீண்ட நேர சோதனையின் முடிவில் வெடி குண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து புரளியை கிளப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடுத்தடுத்து பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இதே போன்று போலியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. அது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, இது போன்ற மிரட்டல் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சந்திப்பு ராய் ரத்தோர் அறிவுறுத்தி உள்ளார்.