குஜராத்தில் சிலிண்டர் வெடித்து எரிவாயு கசிவு : 89 பேர் மருத்துவமனையில் அனுமதி

குஜராத்தின் பாலன்பூரில் பழைய இரும்பு கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து, எரிவாயு கசிந்ததால், உடல்நல குறைவு ஏற்பட்டு 89 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம், பாலன்பூரில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் நேற்று மாலை கேஸ் சிலிண்டர் வெடித்தது. மேலும் அப்பகுதியில் எரிவாயு பரவியதால் ஏராளமானோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பனஸ்கந்தா காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “பாலன்பூர் நகரின் மலான் தர்வாஜா அருகே உள்ள பகுதியில் எரிவாயு கசிவு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

சுமார் 89 பேர் பலன்பூர் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை” என்றார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 89 பேரில் 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

ஒருவர் மட்டும் வென்டிலேட்டர் உதவியுடன் ஆபத்தான நிலையில் உள்ளார். மற்றவர்கள் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்புவர் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து பாலன்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.