யமுனை நதியின் நீரை தடுத்து நிறுத்த பாஜக முயற்சி : அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு

டெல்லி மாநிலத்தில் செயற்கை குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்துவதற்காக யமுனை நதியின் நீரை பாஜக தடுத்து நிறுத்த முயற்சி செய்வதாக டெல்லி மாநில அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி மாநில மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி மாநில முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே முதலமைச்சரை அவரது இல்லத்தில் பார்க்க வந்த எம்பி ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சரின் உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஸ்வாதி, பாஜகவின் கைக்கூலியாக செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி மாநில அமைச்சர் அதிஷி பாஜக மீது புதிய குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அவர் பேசும் போது, “டெல்லி மாநில மக்கள் 7 தொகுதிகளையும் இந்தியா கூட்டணிக்கு வழங்க முடிவு செய்து விட்டார்கள். இதனால்தான் பாஜக தற்போது அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி வருகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட ஐந்தே நாட்களில் எவ்விதமான ஆதாரமும் இல்லாமல் அமலாக்கத்துறை அர்விந்த் கேஜ்ரிவாலை கைது செய்திருக்கிறது” என்றார்.

மேலும், ”வருகிற 25ம் தேதி மக்களவைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக யமுனை நதியின் நீரை தடுத்து நிறுத்தி, டெல்லியில் செயற்கையாக குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்த பாஜக திட்டம் தீட்டி வருகிறது. இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் அரசு மீது அவதூறை பரப்ப பாஜக முடிவு செய்துள்ளது. இதற்காக ஹரியாணாவில் ஆளும் பாஜக அரசுடன் கைகோர்த்து யமுனை நதியின் நீரை தடுத்து நிறுத்த திட்டம் தீட்டி வருகிறார்கள்” என்றார்.