உயர் தொழில்நுட்பம் படித்த தமிழர்களைக் குறிவைக்கும் வெளிநாட்டு மோசடிக் கும்பல் : மதுரை ஆட்சியர் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் உயர் தொழில்நுட்பம் கற்ற இளைஞர்களை மூளைச்சலவை செய்து வெளிநாடுகளுக்கு பண மோசடி வேலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். எனவே, மோசடிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கம்போடியா, தாய்லாந்து, மியான்மார் ஆகிய நாடுகளில் அதிகளவிலான பண மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதில் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் உயர் தொழில்நுட்பம் கற்ற இளைஞர்கள் மூளைச்சலவை செய்து வெளிநாடுகளுக்கு பணமோசடி வேலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

அதிக சம்பளம் என ஆசைவார்த்தை கூறி அழைத்துச் செல்லப்படும் தமிழ்நாட்டு இளைஞர்கள் சட்டவிரோத பண மோசடி செயல்களில் ஈடுபட நிர்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள். சட்டவிரோத செயல்களில் ஈடுபட மறுக்கும் இளைஞர்களை அக்கும்பல் துன்புறுத்துகிறது.

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் வழியாகவும், விசா, பணி ஒப்பந்தம் உள்ளிட்ட விபரங்களை முழுமையாக தெரிந்து கொண்டும், தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறையில் விசாரணை செய்து கொண்டும் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும்.

வெளிநாடுகளில் இது போன்ற வேலைகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உதவி தேவை என்றால் 18003093793, 8069009901, 8069009900 ஆகிய தொடர்பு எண்ணங்களின் தொடர்பு கொள்ளலாம்” என்று மதுரை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.