பிரதமர் மீது பழி சுமத்துவதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் – அண்ணாமலை பதிலடி

பிரதமர் மோடிக்கு தமிழர்கள் மீது அளவற்ற அன்பு, மதிப்பு இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஒடிசா ஜெகநாதர் கோவிலில் தொலைந்து போன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாக பிரதமர் மோடி பேசிய பேச்சு சர்ச்சையாகி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர்கள் மீது திருட்டுப்பழி சுமத்துவதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டு பேசியதாவது:- பொய் சொல்வதையே முழு நேர வேலையாக வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களை அவமதித்து பிரதமர் பேசியதாக மற்றொரு பொய்யை சொல்லியிருக்கிறார்.

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை யாராலும் சந்திக்க முடியாது. தலைமைச் செயலாளர், டிஜிபி, அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் முதலமைச்சரை சந்திக்க தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன்தான் அனுமதி கொடுப்பார். ஒடிசாவின் அரசியல் ஒடிசாவை சாராத ஒருவர் அம்மாநில அரசை இயக்குவதா? என்று பிரதமர் பேசினார். அது தவறுதானே. அந்தந்த மாநிலத்தின் அரசியல் தன்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

புரி ஜெகநாதர் கோவில் கருவூலத்தின் சாவி காணாமல் போய்விட்டது. அதை யாரோ திட்டமிட்டு மறைத்துள்ளனர். அதற்கு பொறுப்பு யார்?. சொல்லப் போனால் அங்கு முதலமைச்சர் வி.கே.பாண்டியன்தானே. தமிழகத்தில் மண்ணின் மைந்தர் என பேசும் நிலையில், ஒடிசாவில் மட்டும் தனிநியாயமா?. ஒடிசா மக்களுக்கு முன்னுரிமை தராமல் வேறு மாநிலத்தில் இருந்து ஒருவர் உள்ளார். நாங்கள் ஒடிசாவில் பிறந்த ஒருவரை ஒடிசா முதலமைச்சர் ஆக்குவோம்’ என பிரதமர் பேசியுள்ளார். இது எப்படி தவறாகும்?. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரதமருக்கு தமிழர்கள் மீது அளவற்ற அன்பு, மதிப்பு இருக்கிறது. அதற்காக தமிழர்களை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு சென்று முதலமைச்சராக்க முடியுமா?. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். பிரதமர் மீது பழி சுமத்துவது கண்டிக்கத்தக்கது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.