பெங்களூரு பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு : கோவையில் என்ஐஏ சோதனை – 2 பயிற்சி மருத்துவர்களிடம் விசாரணை

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அத்துடன் பயிற்சி மருத்துவர் இருவரிடமும் விசாரணை நடத்தினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் சில மாதங்களுக்கு முன்பு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இது தொடர்பாக கர்நாடக மாநில தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கோவையில் இன்று இரண்டு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர்கள் ஜாஃபர் இக்பால் மற்றும் நகீம் சித்திக். இவர்கள் இருவரும் கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக இருந்து வருகின்றனர். இதில் ஜாபர் இக்பால் சாய்பாபா காலனியில் உள்ள நாராயண வீதியிலும், நகிம் சித்திக் சாய்பாபா காலனியில் உள்ள சுப்பண்ண கவுண்டர் வீதியிலும் வசித்து வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் இன்று காலை இவர்களது வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டிலிருந்து இவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தினர். ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாகவும், தடை செய்யப்பட்ட அமைப்புகள் உள்ளிட்ட வேறு சில விவரங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இன்று அதிகாலை தொடங்கிய விசாரணை காலை 9 மணி அளவில் நிறைவடைந்தது. நகிம் சித்திக் இரண்டு ஆண்டு மருத்துவர் பயிற்சி முடித்துள்ளார். அதேபோல் ஜாஃபர் இக்பால் இரண்டாவது ஆண்டு பயிற்சி பெற்று வருகிறார். இருவரது வீடுகள் மட்டுமின்றி இவர்கள் பயிற்சி பெற்று வரும் தனியார் மருத்துவமனையிலும் எப்ஐஏ அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் புறப்பட்டு சென்றனர். விசாரணை நடந்த பகுதியில் உள்ளூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.