காரைக்குடியில் வியாபாரியிடம் 75 பவுன் நகை, 7 கிலோ வெள்ளி திருடிய முகமூடி கொள்ளையர்கள்

காரைக்குடியில் நகை வியாபாரியிடம் 75 பவுன் நகைகள், 7 கிலோ வெள்ளியை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுந்தரம் செட்டியார் தெருவைச் சேர்ந்த நகை வியாபாரி சரவணன் (41). இவர் நேற்றிரவு சென்னையில் 75 பவுன் நகைகள், 7 கிலோ வெள்ளி கட்டி வாங்கி கொண்டு காரைக்குடிக்கு பேருந்தில் வந்தார். இன்று (மே.21) காலை பேருந்தில் இருந்து இறங்கி தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் முகமூடி, ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் கத்தியை காட்டி மிரட்டி, தங்க நகைகள், வெள்ளிக் கட்டிகளை பறித்துச் சென்றனர்.

இது குறித்து காரைக்குடி வடக்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காரைக்குடியில் உள்ள நகை கடைகளுக்கு கொடுப்பதற்காக 75 பவுன் நகைகளை சென்னையில் இருந்து வாங்கி வந்தது தெரியவந்தது. மேலும் நேற்று பகலில் இதே 6 பேர், பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்துச் சென்ற மென்பொறியாளரிடம் பணம், லேப்டாப்பை பறித்துச் சென்றனர்.

அந்த முகமூடி கொள்ளையர்களை போலீஸார் பிடிக்காத நிலையில் மீண்டும் மற்றொரு கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டுள்ளனர். முகமூடி கொள்ளையர்கள் தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.