புதுக்கோட்டை மாவட்டத்தில்  சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக திருத்தியமைக்கப்பட்ட கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஊரக உள்ளாட்சிப் பகுதிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, திருத்தியமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று (20.05.2024) நடைபெற்றது.

பின்னர் அவர் தெரிவித்ததாவது; தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் மாவட்டம்தோறும் சீமைக்கருவேல மரங்களை அகற்றி நன்மை தரும் மரங்களை நடவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டத்தில், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, திருத்தியமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 08.05.2024 அன்று தேதிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசாணையில்  தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி ஊரகப்பகுதிகள், பேரூராட்சிகள், நகராட்சிப்பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்திடவும், அவ்விடங்களில் புதிதாக நிழல் தரும் மரங்கள் அல்லது பலன்தரும் மரங்களை நடவு செய்திடவும், மேலும் விதைகள் தூவி புதிய மரம்,செடிகளை உருவாக்கிடவும், தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றிடும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளான, அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், ஆரியூர் ஊராட்சியிலும் மற்றும் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், மூக்குடி ஊராட்சியிலும் மற்றும் அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கீழப்பணையூர் ஊராட்சியிலும் மற்றும் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், பெருநாவலூர் ஊராட்சியிலும் மற்றும் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், பிசானத்தூர் ஊராட்சியிலும் மற்றும் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், மழையூர் ஊராட்சியிலும் மற்றும் குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம், குளத்தூர் ஊராட்சியிலும் மற்றும் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், கோலேந்திரம் ஊராட்சியிலும் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கொப்பனாப்பட்டி ஊராட்சியிலும் மற்றும் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், குப்பையம்பட்டி ஊராட்சியிலும் மற்றும் திருமயம் ஊராட்சி ஒன்றியம், ஆத்தூர் ஊராட்சியிலும் மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கலங்குடி ஊராட்சியிலும் மற்றும் விராலிமலை ஊராட்சி ஒன்றியம், நீர்பழனி ஊராட்சியிலும் உள்ளிட்ட பகுதிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றிட, ஊராட்சி அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைத்து  பணிகளை மேற்கொள்ள  தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் சீமைக்கருவேல மரங்களை அகற்றிட ஒத்துழைப்பு நல்கி, சீமைக்கருவேல மரங்கள் இல்லா மாவட்டமாக மாற்றிட ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரம்யாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாசன், பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.