சென்னை மாநகராட்சியில் முதல்முறையாக இந்த ஆண்டு 2000 நாய்களுக்கு உரிமம், 3000 விண்ணப்பங்கள் பரிசீலனை

சென்னை மாநகராட்சியில் முதல்முறையாக இந்த ஆண்டு 2,123 மேற்பட்ட நாய்களுக்கு வளர்ப்பு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்போர், அவற்றுக்கு சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெறுவது கட்டாயம். இதன் மூலம் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடுவது உறுதி செய்யப்படுகிறது. குடற்புழு நீக்கமும் செய்யப்பட்டு, அவற்றின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகிறது.

மாநகராட்சியிடம் உரிமம் பெறாதவர்களிடம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்டு, விளக்கம் திருப்தி இல்லாத பட்சத்தில் அபராதம் விதிக்க முடியும். கடந்த மே 5-ம் தேதி நுங்கம்பாக்கத்தில் வளர்ப்பு நாய்கள் சிறுமியை கடித்துக் குதறிய சம்பவத்துக்கு பிறகு, செல்லப் பிராணிகள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கான கட்டுப்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

உரிமம் பெறாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை மிகவும் குறைவாக இருப்பதால், தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த பிறகு, குறந்தபட்சம் ரூ.1000 அபராதம் விதிக்க வழிவகை செய்ய மாமன்ற அனுமதி கோர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், செல்லப் பிராணிகளுக்கு உரிமம் கோரி ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இதன்மூலம் உரிமம் பெறுவோர் எண்ணிக்கையும், விண்ணப்பிப்போர் எண்ணிக்கையும் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மாநகராட்சி தலைமை கால்நடை மருத்துவ அலுவலர் கம்மால் உசேன், “இன்று காலை நிலவரப்படி 2,985 பேர் நாய் வளர்க்க உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் 2,123 பேர் உரிமம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 1,560 பேர் மட்டுமே உரிமம் பெற்றிருந்தனர். மே 5-ம் தேதிக்கு முன்பு வரை இந்த ஆண்டு சுமார் 130 பேர் மட்டுமே உரிமம் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு சுமார் 10 ஆயிரம் நாய்களுக்கு உரிமம் வழங்க இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம்” என்றார்.