சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும் – அகிலேஷ் யாதவ்

தேர்தல் பத்திரம் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை திரட்டியதன் மூலம் பா.ஜ.க.வின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, “நீங்கள் நிதி மோசடி செய்திருந்தால் அதை விசாரிக்க வருமான வரித்துறை உள்ளது. அப்புறம் ஏன் உங்களுக்கு சிபிஐ தேவை? மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் அதை பயன்படுத்தி கொள்ளலாம்.

பா.ஜ.க.வின் அரசியல் எதிரிகளை பழிவாங்க மட்டுமே சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. கட்சிகளை உடைக்க அவை உதவுகின்றன. சி.பி.ஐ. சோதனைகளை தவறாக பயன்படுத்துவதன் மூலம் மிரட்டி பணம் பறிக்கும் செயலில் பா.ஜ.க. ஈடுபடுகிறது.

தேர்தல் பத்திரம் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை திரட்டியதன் மூலம் பா.ஜ.க.வின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்தது. பணமதிப்பு நீக்கத்தின்போது என்ன தவறு நடந்தது என்பதை ஏன் இந்த அமைப்புகள் விசாரிக்கவில்லை. அப்போதுதான் பலர் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றினார்கள். இதுபோன்றவற்றை பார்க்கும்போது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இனி தேவையில்லை என்றே தோன்றுகிறது. அவற்றை இழுத்து மூடிவிடலாம். இந்தியா கூட்டணிக்கு இதை நான் ஒரு முன்மொழிவாகவே வைக்கிறேன்” என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.