பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அரைவேக்காடு என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும் : ஆர்.பி.உதயகுமார்

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அரைவேக்காடு என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் பொதுச் செயலாளராகி உள்ள நிலையில், நீதிமன்றமும் அவருக்கு சாதகமாகவே தீர்ப்பளித்தது.

அதிமுகவை கைப்பற்ற தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் ஓபிஎஸ். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த கூடாது என தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த கூடாது என தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது; பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அரைவேக்காடு என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். அண்ணாமலை பேச்செல்லாம் பொய்யானது, அவர் கர்நாடகாவில் என்ன பேசினார் என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். தனது கட்சியோடு கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டையே பட்டா போட்டு தருவதாக கூறினார்கள் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதாக வரும் தகவலில் உண்மையில்லை. இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்ட ஓபிஎஸ்சை எந்த வகையில் ஏற்க முடியும்? பதவி பறிபோகிறது என்பதால் கட்சி பிரிவுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது ஓபிஎஸ்தான் என்று கூறியுள்ளார்.