கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சிஐஎஸ்எப் வீரர் மரணம்

கல்பாக்கம் அணு மின்நிலையத்தில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சிஐஎஸ்எப் வீரர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் அணு மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிஐஎஸ்எப் வீரர் ரவி கிரண் என்பவர், இரவு பணி முடிந்து இன்று பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகத்தடையில் பேருந்து ஏறி, இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக அவர் வைத்திருந்த துப்பாக்கி விசையில் கைவிரல் பட்டத்தில் வெடித்தது. இதில் ரவி கிரண் கழுத்தில் குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே உண்மையிலேயே துப்பாக்கி எதிர்பாராதவிதமாக அழுந்தி குண்டு பாய்ந்ததா அல்லது ரவி கிரண் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.