49 தொகுதிகளில் நாளை காலை தொடங்குகிறது 5ம் கட்டத் தேர்தல் – வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

மக்களவைத் தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு 49 தொகுதிகளில் நாளை காலை தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

5ம் கட்டத் தேர்தல்: மக்களவைத் தேர்தல் 2024-ன் 5-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ளது. 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், பிஹார் மற்றும் ஒடிசாவில் தலா 5 தொகுதிகள், ஜார்க்கண்ட்டில் 3 தொகுதிகள் என 6 மாநிலங்களில் 47 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவுகள் சுமூகமாக நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி (ரேபரேலி), ஸ்மிருதி இரானி (அமேதி), பியூஷ் கோயல் (மும்பை வடக்கு), சிராக் பாஸ்வான் (ஹாஜிபூர், பிஹார்), ஒமர் அப்துல்ல (பாரமுல்லா, ஜம்மு காஷ்மீர்) உள்ளிட்ட பல விவிஐபிக்கள் இந்த தேர்தல் களத்தில் உள்ளனர்.

6ம் கட்டத் தேர்தல்: இதனிடையே, மே 25ம் தேதி நடைபெற உள்ள 6ம் கட்டத் தேர்தலில் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆறாம் கட்ட வாக்குப் பதிவின்போது 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் 3ம் கட்ட வாக்குப் பதிவின்போது நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு 6-ம் கட்டத்தில் அந்த தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதில் போட்டியிடும் 20 வேட்பாளர்களும் இதில் அடங்குவர். இந்த தொகுதிக்கான மனுதாக்கல் ஏற்கெனவே நிறைவடைந்து விட்டது.

மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு மொத்தம் 1978 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 6 ஆம் கட்டத்திற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2024 மே 06 ஆகும். தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களையும் பரிசீலனை செய்ததில், 900 வேட்பு மனுக்கள் செல்லுபடியாகும் என்று கண்டறியப்பட்டது. அதில் மனுக்களை விலக்கிக் கொண்டவர்கள் தவிர இறுதியாக 889 பேர் களத்தில் உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறாம் கட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும், பிஹாரில் 8 தொகுதிகளுக்கும், டெல்லியில் 7 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.