100 நாள் வேலைத்திட்ட ஊதியம் உயர்வு : அரசாணை வெளியிட்டு தமிழக அரசு அறிவிப்பு

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் குளம், குட்டைகள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் இதில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த பணியில் ஈடுபடுபவர்களுக்கு தனியாக மத்திய அரசு சார்பில் அடையாள அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே சமீபத்தில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணியாளர்களின் தினசரி ஊதியத்தை அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் தற்போது வழங்கப்பட்டு வரும் தினசரி ஊதியமான 294 ரூபாயிலிருந்து, 319 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக இன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.