மதுரை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு – பில் கலெக்டர் உள்பட 2 பேர் கைது

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு ரூ. 10,000 லஞ்சம் வாங்கும் போது கையும், களவுமாக பில் கலெக்டர், உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட கண்ணனேந்தல் விஜயலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியரான இவர் தனது மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களைத் தனது மூத்த மகன் ஈஸ்வர கண்ணனுக்கு தானமாக வழங்கினார். இதையடுத்து தனது மகனுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கான சொத்துவரி மாற்றம் செய்வதற்காக மதுரை மாநகராட்சி 6வது வார்டு கண்ணனேந்தல் மாநகராட்சி பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 13-ம் தேதி விண்ணப்பித்த பின்பாக, சிக்கந்தர்சாவடி பகுதியைச் சேர்ந்தவரான பில் கலெக்டரான ஆறுமுகம் மற்றும் அவரது உதவியாளர் சுதாகர் ஆகிய இருவரும் பரசுராமனின் இடத்தை நேரடியாக கள ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது சொத்துவரி மாற்றம் செய்வதற்காக பரசுராமனிடம் இருந்து பில் கலெக்டர் ஆறுமுகம் 20,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளனர். ஆனால், பரசுராமன் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், மூன்று நாட்களாக லஞ்சம் தொடர்பாக 20,000 ரூபாயில் இருந்து 15,000 ரூபாயாக பேரம் பேசி கடைசியாக ரூ.10,000 லஞ்சமாக தர வேண்டும் என்று ஆறுமுகம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு பரசுராமன் தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் பரசுராமனிடம் ரசாயனம் தடவிய 10,000 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாநகராட்சி பிரிவு அலுவலகத்திற்கு இன்று சென்ற பரசுராமன், பில் கலெக்டர் ஆறுமுகத்திடம் ரசாயனம் தடவிய 10,000 ரூபாய் நோட்டுகளை வழங்கினார். அந்த பணத்தினைப் பெற்றுக்கொண்ட ஆறுமுகம் அவரது உதவியாளர் அற்புதம் (எ) சுதாகரிடம் வழங்கியுள்ளார். இதனை ரகசியமாக கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் குமரகுரு தலைமையிலான அதிகாரிகள் நேரடியாக சென்று பில் கலெக்டர் ஆறுமுகம் மற்றும் உதவியாளர் சுதாகர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கி கையும், களவுமாக மதுரை மாநகராட்சி அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.