புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் அரசுப் பொதுத்தேர்வு தேர்ச்சி பகுப்பாய்வு குறித்து தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், அரசு, மாதிரி, ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளில், 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு தேர்ச்சி பகுப்பாய்வு குறித்து, தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா, தலைமையில் இன்று (17.05.2024) நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது; தமிழக அரசு மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி இன்றையதினம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, மாதிரி, ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிகளில் 10 -ஆம் வகுப்பு மற்றும் 12 -ஆம் வகுப்பு  அரசுப் பொதுத்தேர்வுகளின்  தேர்ச்சி பகுப்பாய்வு குறித்து மேல்நிலைப்பள்ளிகளின்  தலைமையாசிரியர்களுக்கான  மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மேலும், ஊராட்சி  ஒன்றிய வாரியாக அரசு, மாதிரி, ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிகளில் 2024 -ஆம் ஆண்டு 10 -ஆம் வகுப்பு மற்றும் 12 -ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில்  பள்ளி வாரியாக தேர்ச்சி அறிக்கை, பாடவாரியாக சராசரி மதிப்பெண், தேர்ச்சி பெறாத மாணவர்கள் விபரம், தேர்ச்சி பெறாத  மாணவர்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில்  பெற்ற மதிப்பெண், வருகை சதவீதம், தேர்ச்சி பெறாமைக்கான காரணம்  ஆகியவை குறித்து தலைமையாசிரியர்களிடம் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், 100 சதவீத தேர்ச்சியினை பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

3 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு சரியாக வருகை புரியாத 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு  மாணவர்கள் குறித்த விபரத்தினை மாதத்திற்கு மூன்று முறை கூட்டப்படும் பள்ளி மேலாண்மைக் குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்று, அக்குழுவின் வாயிலாக  அத்தகைய  மாணவர்களை  தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிய  செய்ய வேண்டும். மேலும்  3 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு  வருகை புரியாமல் உள்ள 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு மாணவர்கள் பற்றிய விபரத்தினை  மூன்று மாதத்திற்கு ஒருமுறை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தலைமையாசிரியர்கள் தெரியப்படுத்திட வேண்டும்.

10 -ஆம் வகுப்பு மற்றும் 12 -ஆம் வகுப்பு  அரசுப் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அனைவரையும்  துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்க செய்து, சிறப்பு பயிற்சி வகுப்பு வாயிலாக துணைத்தேர்வில் தேர்ச்சி பெறச் செய்து,  உயர் வகுப்புகளில் சேர்ந்து அவர்கள் தொடர்ந்து பயில்வதற்கு வழிகாட்டிட வேண்டும். கவுன்சிலிங் தேவைப்படும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் வழங்குவதற்கான  ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் ஏதாவது ஓரிடத்தில் வேலையில் சேர்ந்திருப்பதாக தகவல் தெரியவந்தால் வேலையில் பணியமர்த்தியவர்கள் பற்றிய  தகவலை உடனடியாக தலைமையாசிரியர்கள் சார்ந்த தாலூகா வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்த கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்டம், அரசுப்பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்திடவும், 95 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி விழுக்காட்டினை எட்டிடவும், பள்ளிகளில் ஒருங்கிணைந்து             செயல்பட்டு  இலக்கினை அடைந்திட வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா, மாவட்டக் கல்வி அலுவலர்கள் ரமேஷ் (புதுக்கோட்டை), ராஜேஸ்வரி (அறந்தாங்கி), தலைமையாசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.