சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சுபமுகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சுபமுகூர்த்தம், வார இறுதிநாட்களையொட்டி சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: மே 18,19 தேதிகள் வார இறுதி நாட்கள் என்பதுடன் சுபமுகூர்த்தமும் சேர்ந்து வருவதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 1,875 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 555 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

சென்னை, கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 65 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது தவிர கூடுதல் பேருந்துகளை இயக்கவும் தயாராக உள்ளோம். இப்பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.