அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., மறைவு -அரசியல் கட்சியினர் இரங்கல்

அதிமுக சார்பில் இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்த, கோவையைச் சேர்ந்த தா.மலரவன் காலமானதை அடுத்து அரசியல் கட்சியினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் தா.மலரவன். இவர் கடந்த 2001ம் ஆண்டு அதிமுக சார்பில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு கோவை மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றார். 2011ம் ஆண்டு இந்த தொகுதி மறுசீரமைக்கப்பட்டு கோவை வடக்கு தொகுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிட்ட தா.மலரவன், சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டில் சிகிச்சையில் பெற்று வந்த தா.மலரவனின் உயிர் பிரிந்தது. இதையடுத்து அதிமுகவினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.