மிசோராம் மாநிலத்தில் ஒரே பள்ளியில் சேர்ந்த 8 ஜோடி இரட்டையர்கள்

மிசோராம் மாநிலத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் 8 ஜோடி இரட்டை குழந்தைகள் புதிதாக சேர்ந்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அங்குள்ள ஐஸ் வால் பகுதியில் ஒரு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தான் புதிதாக 8 ஜோடி இரட்டை குழந்தைகள் சேர்ந்துள்ளனர். இதுதொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் லால்வென்ட் லுங்கா கூறுகையில், எங்கள் பள்ளியில் கடந்த ஆண்டுகளிலும் பல இரட்டை குழந்தைகள் சேர்ந்து பயின்றுள்ளனர்.

கடந்த கல்வியாண்டில் வெவ்வேறு வகுப்புகளில் 4 ஜோடி இரட்டை குழந்தைகள் பயின்றனர். ஆனால் இந்த ஆண்டு அதிக அளவாக 8 ஜோடி இரட்டையர்கள் சேர்ந்து சாதனை படைத்துள்ளது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இதில் 4 ஜோடி பெண் குழந்தைகளும், 3 ஜோடி ஆண் குழந்தைகளும் அடங்குவர் என்றார்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 8 ஜோடி இரட்டையர்களில் ஒரு ஜோடி தலைமை ஆசிரியரின் குழந்தைகள் ஆவார்கள். அவரது மகன் ரெம்ருதிகா, மகள் லால்சார்ஜோவி ஆகியோர் எல்.கே.ஜி.யில் சேர்ந்துள்ளனர். அவர்கள் ஜூலை 21-ந் தேதி 5 வயதை எட்டுகிறார்கள்.