பெண்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது திமுக அரசு மீது இபிஎஸ் பாய்ச்சல்

தமிழ்நாட்டில் பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு திமுக ஆட்சியில் சட்டம்ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.  

உடுமலைப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாகத் திகழ்ந்த தமிழ் நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு விடியா திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.

கடந்த சில மாதங்களாகவே, தொடர்ச்சியாக அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், 4 மாத கர்ப்பமான நிலையிலேயே வெளியில் தெரியவந்துள்ளது. காவல் துறை விசாரணையில், இந்த கொடூரச் செயலை செய்த கும்பல் மேலும் ஒரு சிறுமியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் சமூக வலைதளங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது.

திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளையும், போதைப்பொருள் புழக்கத்தால் நடைபெறும் குற்றச் செயல்களையும் நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்துள்ளேன். சிறார்கள்-இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. தற்போது, நெஞ்சை பதைபதைக்கும் இத்தகு குற்றச் செயல்களைக் கூட சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செய்யத் துணிந்துவிட்டனர் சமூக விரோதிகள். இந்த திமுக ஆட்சி தமிழ்நாட்டை அலங்கோல நிலைக்கு தள்ளிவிட்டதன் அடையாளம் தான் மேற்கண்ட நிகழ்வு.

அம்மாவின் ஆட்சியில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கழக அரசு சட்டத்தின் நெறிகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக பல்வேறு அவதூறுகளைப் பரப்பி திசை திருப்பினார். அன்று தன்னை பெண்களின் பாதுகாவலராக அறிவித்து முழங்கிய ஸ்டாலின், தற்போது முதலமைச்சராக இருக்கும் இந்த திமுக ஆட்சியில், தொடர்ச்சியாக நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் குறித்து நான் பேசுகின்றபோது, தேர்தல் ஆதாயத்திற்காக இல்லாமல், ஒரு குடும்பத் தலைவனாக நம் பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பொறுப்பிலேயே பேசினேன். தற்போது பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் இத்தகு பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தத் தவறிய திமுக அரசை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மட்டுமல்லாமல், ஒரு தந்தை என்கிற அக்கறையுடனே கண்டிக்கிறேன். உடுமலைப்பேட்டை பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்