பிரதமர் மோடி அடுத்த தலைமுறைக்கு வழிவிட மறுக்கிறார் : உத்தவ் தாக்கரே

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த தலைமுறைக்கு வழிவிடுவதற்குப் பதிலாக, மீண்டும் தானே பிரதமர் ஆக வேண்டும் என ஆர்வம் காட்டுகிறார் என்று சிவ சேனா (யுபிடி) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் தானே மக்களவைத் தொகுதியில் தனது கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய எம்பி ராஜன் விச்சாரேவுக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரே வாக்கு சேகரித்தார். மகாராஷ்டிர முதல்வரும் சிவ சேனாவில் பிளவை ஏற்படுத்தியவருமான ஏக்நாத் ஷிண்டேவின் செல்வாக்கு மிக்க பகுதி தானே என்பதால், இந்த தொகுதி இரு தரப்புக்கும் கவுரவம் சார்ந்த பிரச்சினையாக மாறி இருக்கிறது.

ஏக்நாத் ஷிண்டே தனது கட்சி சார்பில் இந்த தொகுதியில் நரேஷ் மஸ்கேவை நிறுத்தி உள்ளார். பிரச்சாரத்தின்போது பேசிய உத்தவ் தாக்கரே, “இந்த தொகுதியில் நடைபெறும் போட்டி விசுவாசத்துக்கும் துரோகத்துக்கும் இடையிலான மோதல். துரோகம் இழைத்தவர்களுக்கு தானே தொகுதி மக்கள் பாடம் புகட்ட வேண்டும். சிவசேனாவும் தானேவும் ஒரு தனித்துவமான பிணைப்பைக் கொண்டுள்ளன. சிவ சேனாவின் தொடக்க காலங்களில் கட்சியை காலூன்ற வைத்தவர்கள் தானே நகர மக்கள்தான்.

பிரதமர் நரேந்திர மோடி, என்னையும், சரத் பவாரையுமே தொடர்ந்து குறிவைத்துப் பேசுகிறார். எனது தலைமையிலான சிவ சேனாவை போலி சிவ சேனா என அவர் விமர்சிக்கிறார். அதேபோல், சரத் பவாரை, அலைந்து திரியும் ஆத்மா என விமர்சிக்கிறார். 10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த நரேந்திர மோடி, அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டிருக்க வேண்டும். மாறாக, மீண்டும் தானே பிரதமர் ஆக வேண்டும் என்பதிலேயே அவர் ஆர்வம் காட்டுகிறார். தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, அவர் வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார். மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது” என தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் 4 கட்டத் தேர்தல்களில் 35 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், வரும் 20ம் தேதி நடைபெற உள்ள 5ம் கட்டத் தேர்தலில் மீதமுள்ள 13 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.